சூப்பர் ஓவரை வீசும் போது எனது இதய துடிப்பே மிக அதிகமாக இருந்தது - ரவி பிஷ்னோய்!

Updated: Thu, Jan 18 2024 14:08 IST
சூப்பர் ஓவரை வீசும் போது எனது இதய துடிப்பே மிக அதிகமாக இருந்தது - ரவி பிஷ்னோய்! (Image Source: Google)

முதல் முறையாக இந்திய அணிக்கு எதிரான நேரடி டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இந்திய அணியில்ல் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 121 ரன்களும், ரிங்கு சிங் 69 ரன்களும் எடுத்தனர். அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் தொடக்க வீரர்கள் தலா 50 ரன்களும், கடைசி வரை கடுமையாக போராடிய குல்பதீன் நைப் 55* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. 

அதன் பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்ததால் முதல் சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது. பின் இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி ரவி பிஸ்னோயின் பந்துவீச்சில் சிக்கி 1 ரன்னில் இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததால் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.

இந்தநிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டி குறித்து பேசிய ரவி பிஸ்னோய், இரண்டாவது சூப்பர் ஓவருக்காக தான் வைத்திருந்த திட்டங்கள் குறித்தும் ஓபனாக பேசியுள்ளார்.  இதுகுறித்து பேசிய ரவி பிஸ்னோய், “பதட்டம் அதிகமாக இருந்தது உண்மை தான். எனது இதய துடிப்பே மிக அதிகமாக இருந்தது, ஆனால் நான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது. 

கேப்டன் என்னை பந்துவீச சொன்ன போதே நான் சில விசயங்களை முடிவு செய்தேன். நான் சரியான லெந்த்தில் பந்தை வீசினால் அதை பேக் ஃபுட்டில் இருந்து ஆஃப்கானிஸ்தான் வீரர்களால் இலகுவாக எதிர்கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும். சூப்பர் ஓவரில் மிக குறைவான ரன்களை கட்டுப்படுத்துவது சாதரண விசயம் இல்லை. ஆனால் நான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. 

எதிரணி பேட்ஸ்மேனால் கணிக்க முடியாத, அவருக்கு பழக்கப்படாத பந்தை வீச வேண்டும் என்பதில் நான் அதிக கவனத்துடன் இருந்தேன். பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்ள அதிகமான பயிற்சிகள் மேற்கொண்டுள்ளேன். போட்டியின் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை