ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக இரு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியா பேட்டிங் துறையில் மிகவும் வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் பந்து வீச்சு துறையில் பலமான அணியாக எதிரணிகளை மிரட்டி வருகிறது. மேலும் தற்சமயத்தில் இந்திய பேட்டிங் வரிசையில் காயமடைந்த வீரர்களால் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக இருக்கிறது.

Advertisement

அதே போல பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி என பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் வலது கை வீரர்களாக இருப்பது மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே இவற்றை பயன்படுத்தி நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட பாகிஸ்தான் நிச்சயமாக வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் உறுதியாக தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக 2021 டி20 உலகக்கோப்பை போல ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.

Advertisement

இருப்பினும் அதே தரமான பவுலர்களை 2022 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக எதிர்கொண்டு சரிந்த இந்தியாவை தனி ஒருவனாக வெற்றி பெற வைத்த விராட் கோலி இம்முறையும் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுப்பார் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் என்று தெரிவிக்கும் விராட் கோலி அதை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அவர்களுடைய பலம் பவுலிங் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பவுலர்கள் அவர்களிடம் இருக்கின்றனர். எனவே நல்ல நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளில் இருக்க வேண்டும். நான் என்னுடைய ஆட்டத்தை எப்படி முன்னேற்றலாம் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 

அது தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியிலும் ஒவ்வொரு வருடமும் நீண்ட காலமாக என்னுடைய அணிக்கு சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த நிலையை அடைந்த பின் மேற்கொண்டு தொடுவதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட சாதனைகளும் கிடையாது. அதனால் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சூழ்நிலையில் இருந்து எப்படி என்னுடைய அணியை வெற்றி பெற வைக்கலாம் என்பதே என்னுடைய மனநிலையாகும். அதற்காக ஒவ்வொரு நாளும் முன்னேறுவதற்கு நான் பயிற்சிகளை எடுத்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News