இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நேப்பியரில் நடந்தது. 

Advertisement

மழையால் ஆட்டம் தாமதமாகத்தான் தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால் டிம் சௌதி கேப்டன்சி செய்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

Advertisement

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 3 ரன்களுக்கும், வில்லியம்சனுக்கு மாற்று வீரராக களமிறங்கிய மார்க் சாப்மேன் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு டெவான் கான்வே மற்றும் க்ளென் ஃபிலிப்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு 10 ஓவரில் 86 ரன்களை குவித்தனர்.

நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 15.5 ஓவரில் 130 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஃபிலிப்ஸ் 54 ரன்களுக்கு சிராஜின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, கான்வேவை 59 ரன்களுக்கு அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். 16 ஓவரில் 130 ரன்கள் அடித்திருந்த நியூசிலாந்து அணிக்கு கடைசி 4 ஓவரில் வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கடைசி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இந்திய அணி. 

16ஆவது ஓவரில் ஃபிலிப்ஸை வீழ்த்திய சிராஜ், 18வது ஓவரில் நீஷம் மற்றும் சாண்ட்னெர் ஆகிய இருவரையும் வீழ்த்த, கான்வே மற்றும் டேரைல் மிட்செலை அர்ஷ்தீப் சிங் வீழ்த்த, 19.4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி. 16வது ஓவரில் 3வது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி, அடுத்த 4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் டெத் ஓவர்களை அபாரமாக வீசினர். இருவரும் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (10), ரிஷப் பந்த்(11) ஆகிய இருவரும் இந்த போட்டியிலும் ஏமாற்றமளிக்க, சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

Advertisement

ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 18 பந்தில் 30 ரன்களும், தீபக் ஹூடா 9 ரன்களும் அடித்து களத்தில் இருக்க, இந்திய அணி 9 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்திருக்க மழை பெய்தது. அதன்பின்னர் மழை நிற்காததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டி.எல்.எஸ் முறைப்படி ஆட்டம் டை என அறிவிக்கப்பட்டது. இதே 9 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் அடித்திருந்தது. இந்திய அணி கூடுதலாக 2 விக்கெட்டை இழந்திருந்தாலும், 13 ரன்கள் அதிகமாக அடித்திருந்ததால் ஆட்டம் டை ஆனது.

எனவே இந்திய அணி 1-0 என டி20 தொடரை வென்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News