TNPL 2024: ஷாருக் கான், முகிலேஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்து கோவை கிங்ஸ் வெற்றி!

Updated: Tue, Jul 16 2024 22:56 IST
Image Source: Google

டிஎன்பிஎல் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து திருச்சி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் - அர்ஜுன் மூர்த்தி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அர்ஜுன் மூர்த்தி 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த வசீம் அஹ்மத் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷ்யாம் சுந்தர் 5 ரன்களிலும், அந்தோனி தாஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிர்மல் குமார் 3 ரன்களிலும், சரவண குமார் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க திருச்சி அணியானது 35 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் - ஜாஃபர் ஜமால் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 34 ரன்களைச் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை போராடிய ஜாஃபர் ஜமால் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசியதுடன், 28 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களைச் சேர்த்தது. லைகா கோவை கிங்ஸ் அணி தரப்பில் கேப்ட ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.

அதன்படி அணியின் தொடக்க வீரர் சுரேஷ் குமார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சனும் 4 ரன்களை மட்டுமே எடுத்தந் நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் லைகா கோவை கிங்ஸ் அணி 7 ரன்களுக்குள்ளேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த சுஜய் மற்றும் முகிலேஷ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

இருவரும் இணைந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடியதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசியதன் மூலம் அணியின் ஸ்கோரானது மளமளவென உயரத்தொடங்கியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகிலேஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 118 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகிலேஷ் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களையும், சுஜய் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணியானது 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஷாருக் கான் தேர்வு செய்யப்பார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை