தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்பார்டன்ஸ் அணிக்கு அபிஷேக் மற்றும் கவின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபிஷேக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராபின் பிஸ்ட் வந்த வேகத்திலேயே 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கவினுடன் இணைந்த விஷால் வைத்யாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கவின் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இந்த இணை மூன்றாவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த கவின் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 70 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் ஒரு ரன்னிற்கும், சன்னி சந்து 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஆனாலும் அதிரடியாக விளையாடி வந்த விஷால் வைத்யா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் முருகன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், அலெக்ஸாண்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - சுரேஷ் லோகேஷ்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹரி நிஷாந்த் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த லோகேஷ்வர் - ஜெகதீசன் கௌசிக் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 79 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பின்னர் 69 ரன்கள் எடுத்த நிலையில் லோக்‌ஷ்வர் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சசிதேவ் 13 ரன்களிலும், ஸ்வப்நில் சிங் ஒரு ரன்னிலும், சரவணன் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் சிறப்பாக விளையாடிய ஜெகதீசன் கௌசிக்கும் 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி ஓவரில் மதுரை அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை எதிர்கொண்ட முருகன் அஸ்வின் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் வீழ்த்தி தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News