தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!

Updated: Thu, Dec 08 2022 11:25 IST
“Very Happy, To Win In My First Series As Captain”- Litton Das (Image Source: Google)

வங்கதேசம் - இந்தியா விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்கா மைதானத்தில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மகமதுல்லா மற்றும் மெகதி ஹாசன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  மகமதுல்லா 77 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இறுதிவரை போராடிய மெஹிதி ஹாசன் கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக வங்கதேச அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் அடித்திருந்தது. நூறு ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார் மெகதி. சற்று கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மீண்டும் ஒருமுறை மோசமான துவக்கம் அமைந்தது. 65 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வந்தனர்.

அக்சர் பட்டேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 82 ரன்கள் ஆட்டம் இழந்தார். அக்சர் பட்டியில் 56 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கட்டை விரலில் காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறி இருந்த கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பதாவது விக்கெட்டுக்கு களம் இறங்கி கடைசி வரை இந்திய அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றார்.

கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் தேவை என இருந்த போது சிக்ஸ் மற்றும் பவுண்டரி மழைகள் பொழிந்து கடைசி பந்து வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார். கடைசி பந்தில் சிக்ஸ் தேவை என இருந்தது. அப்போது அவரால் ரன் எதுவும் அடிக்க முடியவில்லை. வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இறுதிவரை போராடிய ரோஹித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்தார்.

தொடரை கைப்பற்றிய பிறகு பேட்டி அளித்த வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ், “கேப்டன் பொறுப்பேற்று முதல் தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 240-250 ரன்கள் வந்தால் சரியாக இருக்கும் என நினைத்தேன். மிக மோசமான துவக்கத்திற்கு பிறகு, மெஹதி ஹாசன் மற்றும் மகமத்துல்லா இருவரும் அணியை முக்கியமான கட்டத்தில் காப்பாற்றினர். 

களத்தில் அவர்களுக்கு இடையே என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ஆனால் இருவரும் இன்றைய போட்டியில் திருப்பமுனையாக இருந்தனர். பவுலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்தனர். அவர்களை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை நான் முன்னமே யோசித்து வைத்திருந்தேன். அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடுவோம். 3-0 என வெல்வோம்” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை