சில நாள்களுக்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு காணோளி வைரலானது. காம்ப்லியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததையும், அவரால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை என்பதையும் அந்த காணொளியில் காண முடிந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரின் இத்தகைய நிலையைக் கண்டு, ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்து, அவருக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் அவர் குறித்த காணொளி வைரலானதை தொடர்ந்து, காம்ப்ளியின் நண்பர்கள் ரிக்கி மற்றும் மார்கஸ் ஆகியோர் நேரில் சென்று அவரது நலம் பற்றி விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் வினோத் காம்ப்ளி தனது வைரலான காணொளி குறித்து அவர்களிடம் பேசுகையில். "நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு காம்ப்ளியின் நண்பர் மார்கஸ் கூறுகையில், "நாங்கள் அவரை சந்தித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் குணமடைந்து வருகிறார், அவரது உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. வைரலாகி வரும் காணொளி பழையது” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வினோத் காம்ப்ளி தற்சமயம் நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரராக அறியபட்ட வினோத் காம்ப்ளி, இந்திய அணிக்காக 1991ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3,500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.