உலகின் தலைசிறந்த சேஸர் விராட் கோலி - சவுரவ் கங்குலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வர்ணனையாளராக இயங்கி வருகிறார் கங்குலி. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இப்போதைக்கு இந்தப் போட்டியில் 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்த சூழலில் எவ்வளவு இலக்கு இருந்தால் இந்திய அணியால் கடக்க முடியும் என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தப் போட்டியில் 360 அல்லது 370 ரன்களை இலக்காக இந்திய அணி கடக்க வேண்டி இருந்தால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இந்திய அணியில் விராட் கோலி உள்ளார். உலகின் தலைசிறந்த சேஸர் என அவர் அறியப்படுகிறார். அவருடன் அணியின் கிளாஸான வீரர்களும் உள்ளனர். அதனால் கடைசி இரண்டு நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி 1,047 ரன்கள் எடுத்துள்ளார். 2 சதம் மற்றும் 5 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அபார ஆட்டத்தை கோலி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.