இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் ரோஹித் சர்மா 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நட்சத்திர வீரர் விராட் கோலி 24 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களிலும் என ஆட்டமிழக்க, பின்னர் இணைந்து பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் - அக்ஸர் படேல் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பின் கேஎல் ராகுல் 31 ரன்னிலும், அக்ஸர் பட்டேல் 33 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த ஷிவம் தூபே 25 ரன்களுக்கும், அர்ஷ்தீப் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
இந்திய அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரனக்ளுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனால் இப்போட்டியானது முடிவு எட்டப்படாமல் டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் பேட்டிங்கில் அரைசதமும், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய துனித் வெல்லாலகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 24 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் அவர் இப்போட்டியில் 24 ரன்களை எடுத்துள்ளதன் மூலம் சர்வதேச ஒரு தரப்பு தொடர்களில் 21ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
மேலும் இப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 22,960 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 21,000 ரன்களை கடந்து இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் 20,655 ரன்களுடனும், நான்காம் இடத்தில் இலங்கை அணியின் குமார் சங்கக்காரா 20,154 ரன்களுடனும் உள்ளனர்.
இருதரப்பு தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
- 22960 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
- 21000 - விராட் கோலி (இந்தியா)
- 20655 - ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்க)
- 20154 - குமார் சங்கக்கார (இலங்கை)
- 19268 - ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)