இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்!
இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலிக்கு 2022ஆம் ஆண்டு தொடக்கம் மோசமாக இருந்த போதும் ஆண்டின் முடிவு யாருமே எதிர்பார்க்காத மகிழ்ச்சிகளுடன் இருந்து வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் கோலியின் கையைவிட்டு டெஸ்ட் கேப்டன்சி போனது, ஆனால் ஆண்டின் இறுதியில் உலகின் டாப் பேட்ஸ்மேன்கள் வரிசைக்குள் மீண்டும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் இருந்த விராட் கோலி, ஆசியக் கோப்பை தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார். குறிப்பாக ஆஃப்கானிஸ்தானுடன் சதமடித்து அசத்தினார். இதே போல டி20 உலகக்கோப்பையிலும் ரன் வேட்டை நடத்தி அசுர ஃபார்மில் இருக்கிறார். அவரின் இந்த கம்பேக்கிற்கு காரணமாக குடும்பத்தினருடன் அவர் நேரம் செலவிட்டதே பார்க்கப்பட்டது.
இந்நிலையில் புத்தாண்டையும் அதே பாணியில் கொண்டாட விரும்பியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று விராட் கோலி, அனுஷ்கா சர்மா, மகள் வாமிகா ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அவர்கள் துபாய்-க்கு தான் சென்றுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அவர்கள் அங்கு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் போட்டுள்ள இன்ஸ்டா பதிவுகள் இணையத்தை கலக்கி வருகிறது.
அமீரகத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து கோலி, தனது மனைவி மற்றும் மகளுடன் சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், "2022ஆம் ஆண்டின் கடைசி சூர்ய அஸ்தமனம்” எனக்குறிப்பிட்டுள்ளார். அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் இருந்து கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மோதவுள்ளது. இதில் டி20 அணியில் இடம்பெறாத விராட் கோலி, ஒருநாள் தொடருக்கு மட்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். இரு அணிகளும் மோதும் இந்த தொடர் ஜனவரி 10, 12 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.