ஐபிஎல் 2024: லண்டனில் இருந்து நாடு திரும்பிய விராட் கோலி; ரசிகர்கள் உற்சாகம்!

Updated: Sun, Mar 17 2024 13:21 IST
ஐபிஎல் 2024: லண்டனில் இருந்து நாடு திரும்பிய விராட் கோலி; ரசிகர்கள் உற்சாகம்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலிருந்து இந்திய மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் விலகினார். இதையடுத்து அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அதன்பின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இத்தொடரிலிருந்து முழுவதுமாக விலகினார் என செய்திகள் வெளியானது. மேலும் அவர் ஐபிஎல் தொடரிலும் ஒருசில போட்டிகளை தவறவிடுவார் என்பது போன்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்றிரவு இந்தியா திரும்பியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் வந்தடைந்த விராட் கோலியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்சிபி அணியுடன் விராட் கோலி இன்று அல்லது நாளை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அவர் முதல் போட்டியில் பங்கேற்பார் என்பது உறுதியாகியுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை