எனக்கு புத்துணர்ச்சி தந்தது தோனியின் மெசேஜ் தான் - விராட் கோலி!

Updated: Mon, Nov 07 2022 11:11 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இதன்லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வதில் மிகவும் முக்கிய பங்காக இருந்தது விராட் கோலி தான். 2 ஆண்டுகளாக சரிவர விளையாடமல் இருந்த கோலி, ஆசிய கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்து இன்று வரை சிறப்பாக ஆடி வருகிறார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்களை விளாசியுள்ளார். அதுவும் 133 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார்.

விராட் கோலியின் இந்த சிறப்பான கம்பேக்கிற்கு தோனியும் முக்கிய காரணம் எனக்கூறலாம். கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, யாருமே தன்னை தொடர்பு கொண்டு பேசவில்லை என்றும், தோனி மட்டுமே தனக்கு ஆறுதல் கூற அழைத்ததாக கூறியிருந்தார். இந்நிலையில் தோனி அன்று என்ன மெசேஜ் அனுப்பினார் என்பதையும் கோலி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கோலி, “தோனி மட்டுமே என்னை தொடர்பு கொண்டார். இப்படி ஒரு சீனியரிடம் இத்தனை நெருக்கமாக இருப்பது எனக்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் என நினைக்கிறேன். எங்களின் நட்பு அவ்வளவு சிறப்பாக உள்ளது. அவர் எனக்காக இருக்கிறேன் என்பதை ஒரே மெசேஜில் விளக்கியிருந்தார். அதாவது, " நீங்கள் மனவலிமையானவர் என நினைப்பவர்களும், அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை கேட்க மறந்துவிடுகிறார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

தோனி கூறியது உண்மை தான். நான் எப்போதும் மிகுந்த நம்பிக்கையான வீரராக பார்க்கப்பட்டுள்ளேன். ஆனால் சில சமயங்களில் அப்படி நடப்பதில்லை. ஒரு இரண்டு அடி பின்னால் எடுத்து வைத்து நாம் என்ன செய்து வருகிறோம், எப்படி ஆடுகிறோம் என்பதை யோசித்துப்பார்த்தால் அனைத்தையும் சரி செய்துவிடலாம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை