கிங் என அழைக்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது - விராட் கோலி!

Updated: Wed, Mar 20 2024 14:03 IST
கிங் என அழைக்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது - விராட் கோலி! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்களது முதல் சமபியன் பட்டத்தை வென்றது. 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் கைப்பற்றப்பட்ட முதல் கோப்பையும் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதற்குமுன் ஐபிஎல் தொடரில் 16 சீசன்களில் விளையாடியுள்ள ஆர்சிபி ஆடவர் அணியால் இதுநாள் வரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அந்த கலங்கத்தை தற்போது ஆர்சிபி மகளிர் அணி நீக்கியுள்ளது. 

இந்நிலையில் கோப்பையை வென்ற ஆர்சிபி மகளீர் அணிக்கு அநத அணி நிர்வாகம் சார்பில் நேற்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவும், ஆர்சிபி அன்பாக்ஸ் விழாவும் நடத்தப்பட்டது. இதில் ஆடவர், மகளிர் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆடவர் அணி வீரர்கள் கோப்பையை வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 

இவ்விழாவில் ஆர்சிபி அணியின் நட்சததிர வீரர் விராட் கோலியுடன் சில கேள்விகள் எழுப்பட்டன. அதில், "ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை எப்படி உணர்கிறீர்கள் 'கிங்'?" என்ற கேள்வி விராட் கோலியிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விராட் கோலி, “முதலில் நீங்கள் என்னை ‘கிங்’ என்று அழைக்காதீர்கள். நீங்கள் அப்படி அழைக்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. என்னை விராட் என்று அழைத்தால் போதும். 

இந்த வருடம் நாங்கள் கோப்பையை இரட்டிப்பாக மாற்றுவோம் என்று நம்புகிறேன். அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஓர் அங்கமாக இருக்க முயற்சி செய்கிறேன். கோப்பையை வென்று ரசிகர்கள் மற்றும் அணிக்குக் கொடுக்க முயல்வேன். ஐபிஎல் கோப்பையை வெல்வது எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கனவு" என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை