டி20 உலகக்கோப்பை: பிரமாண்ட சாதனையைப் படைப்பாரா விராட் கோலி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி பெர்த்-ல் உள்ள மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
லீக் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்திய இந்திய அணி, அதே வேகத்துடன் தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்ள காத்துள்ளது.
இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் விராட் கோலி தான். ஆசிய கோப்பையில் அவர் ஆடத்தொடங்கிய ருத்ர தாண்டவம் இன்னும் நிற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 82, நெதர்லாந்துடன் 62 என இரண்டே இன்னிங்ஸ்களில் 144 ரன்களை அடித்துள்ளார். இவர் இன்றைய போட்டியிலும் பெரிய இன்னிங்ஸ் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் மிகப்பெரிய சாதனையை கோலி படைக்கவுள்ளார். அதாவது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் மஹிலா ஜெயவர்தனே தான் முதலிடத்தில் உள்ளார். 31 போட்டிகளில் அவர் 1016 ரன்களை அடித்துள்ளார். 1000 ரன்களை கடந்த ஒரே ஒரு வீரரும் அவரே ஆகும். இந்த சாதனையை கோலி முறியடிப்பார்.
விராட் கோலி தற்போது வரை 23 போட்டிகளில் 989 ரன்களை அடித்துள்ளார். இன்னும் 11 ரன்களை அடித்தால் 1000 ரன்களை எட்டுவார், இதே போல 28 ரன்களை அடித்தால் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். கடந்த 8 ஆண்டுகளாக இந்த சாதனையை யாருமே நெருங்க முடியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் விராட் கோலி தான் நம்பர் ஒன் ஆக உள்ளார். அவர் 111 போட்டிகளில் 3856 ரன்களை குவித்துள்ளார். இவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா 144 போட்டிகளில் 3794 ரன்களுடன் 2வது இடத்தில் நீடித்து வருகிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் 904 ரன்களை அடித்துள்ள ரோகித் சர்மாவும் இதே தொடரில் 1000 ரன்களை கடப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.