பயிற்சி ஆட்டம்: அர்ஷ்தீப், தூபே அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!

Updated: Sat, Jun 01 2024 23:38 IST
பயிற்சி ஆட்டம்: அர்ஷ்தீப், தூபே அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டமானது இன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சஞ்சு சாம்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் குறிப்பாக ஷாகிப் அல் ஹசன் ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். அதேசமயம் அதிரடியாக விளையாட முயற்சி செய்த ரோஹித் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ரிஷப் பந்துடன் இணைந்த சூர்யகுமார் யாதவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 53 ரன்களைச் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே 14 ரன்களுக்கும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 31 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி இன்னிங்ஸைத் தொடர்ந்தார். 

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்திக் பாண்டியா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் ஹசன், மெஹிதி ஹசன், மஹ்முதுல்லா, தன்விர் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமீயா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் சௌமீயா சர்க்கார், லிட்டன் தாஸ் ஆகியோர் அடுத்தடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் தன்ஸித்துடன் இணைந்த தாவ்ஹித் ஹிரிடோய் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாவ்ஹித் ஹிரிடோயின் விக்கெட்டை அக்ஸர் படேல் கைப்பற்ற, மறுபக்கம் 17 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசனின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். 

பின்னர் இணைந்த அனுபவ வீரர்கள் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மஹ்முதுல்லா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்ப, மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த 28 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் ரன்களை சேர்க்க முடியாத காரணத்தால் வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணியானது 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை