சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியானது த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்திததுடன், நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் முதல் அணியாக இழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி 18ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட ஷஷாங்க் சிங் முதல் பந்தில் பவுண்டரியையும், இரண்டாவது பந்தில் அபாரமான சிக்ஸரையும் விளாசி அசத்தினார். 

அதன்பின் மூன்றாவது பந்தையும் ஷஷாங்க் சிங் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் டீப் மிட் விக்கெட் திசையை நோக்கி தூக்கி அடித்தார். மேலும் அவர் அந்த ஷாட்டை முழையாக விளையாடியதன் காரணமாக நிச்சயம் அது சிக்ஸர் தன் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டெவால்ட் பிரீவில் சிக்ஸருக்கு சென்ற பந்தை தடுத்து நிறுத்தியதுடன், அற்புதமான கேட்ச்சையும் பிடித்திருந்தார். 

மேலும் அவர் இந்தப் பந்தைப் பிடிக்கும்போது, ​இரண்டு முறை பவுண்டரி எல்லைக்கு வெளியேயும், உள்ளேயும் என மூன்று முயற்சிகளில் கேட்சை பிடித்து அசத்தி இருந்தார். மேற்கொண்டு ஏபி டி வில்லியர்ஸும் இதுபோன்ற கேட்சுகளை எடுப்பதில் நிபுணராக இருந்தார், இந்நிலையில் பேபி ஏபிடி என்றழைக்கபடும் டெவால்ட் பிரீவிஸும் அதே பாணியில் இந்த கேட்ச்சை பிடித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் இக்கேட்ச் குறித்த காணொளியும் வைரலாகி வருகிறது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் 88 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 54 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்திருந்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News