இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இலங்கை அணியானது 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா - அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்திருந்த அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்காவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இப்போட்டியின் போது தினேஷ் சண்டிமால் விக்கெட் இழந்த சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போட்டியில் தினேஷ் சண்டிமால் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்படி ஷொயப் பஷீர் வீசிய 23ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை விளையாடமுடியாத படி தரையை ஒட்டியவாறு வீசிய நிலையில், அதனை சற்றும் எதிர்பாராத தினேஷ் சண்டிமால் பந்தை தடுக்க முடியாமல் தடுமாறினார். இதனால் பந்து நேரடியாக அவரது பேட்டில் பட, எல்பிடபிள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஷோயப் பஷீர் பந்துவீச்சில் தினேஷ் சண்டிமால் விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.