ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தற்போது முதல் சுற்று நிறைவடைந்து முக்கியமான சூப்பர் 12 சுற்று தொடங்கியுள்ளது. அதில் அக்டோபர் 22ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற முதல் சூப்பர் 12 போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து எதிர்கொண்டது. 

Advertisement

சிட்னி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 200/3 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிரடியாக 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்த ஃபின் ஆலன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 42 ரன்களை விளாசி அவுட்டானார்.

Advertisement

அவருடன் அசத்திய மற்றொரு தொடக்க வீரர் டேவன் கான்வேயுடன் அடுத்ததாக களமிறங்கி கை கோர்த்த கேப்டன் கேன் வில்லியம்சன் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மெதுவாக விளையாடி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கிய டேவோன் கான்வே 7 பவுண்டரி 2 சிக்சருடன் 92 குவித்தார். அவருடன் கடைசி நேரத்தில் 2 சிக்சரை பறக்க விட்ட ஜிம்மி நீஷம் 26 ரன்கள் குவித்து ஃபினிசிங் செய்தார். மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 201 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே நியூசிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 17.1 ஓவரில் வெறும் 111 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 5, கேப்டன் ஆரோன் பின்ச் 13, மிட்செல் மார்ஷ் 16, மார்கஸ் ஸ்டோனிஸ் 7, டிம் டேவிட் 11, மேத்தியூ வேட் 2 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய நிலையில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்தார்.

அந்த அளவுக்கு அற்புதமாக பந்து வீசிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி மற்றும் மிட்சேல் சாட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதன் வாயிலாக 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நியூசிலாந்து கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பைனலில் தங்களுக்கு தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 15 வருடங்களில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி டி20 உலக கோப்பையில் முதல் முறையாக 200 ரன்களை பதிவு செய்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியையும் பதிவு செய்து இரட்டை சாதனைகளை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு 92 ரன்கள் எடுத்த டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருது வென்றாலும் சூப்பர்மேனை போல் செயல்பட்ட மற்றொரு வீரர் கிளன் பிலிப்ஸ் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

Advertisement

ஆம் இப்போட்டியில் 200 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவிற்கு தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் அவுட்டானதும் நங்கூரத்தை போட முயன்ற மார்க்கஸ் ஸ்டோனிஸ் மிச்செல் சாட்னர் வீசிய 9வது ஓவரின் 3வது பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்தார். ஸ்வீப்பர் கவர் திசை நோக்கி நேராக மேலே சென்ற அந்த பந்தை பார்த்துக்கொண்டே டீப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 30 – 40 அடிகள் வேகமாக ஓடி வந்த கிளன் ஃபிலிப்ஸ் பந்து தரையைத் தொடுவதற்கு முன்பாக ஓடி வந்த வேகத்திலேயே சூப்பர்மேனைப் போல் தாவி 2 கைகளாலும் கச்சிதமாக கேட்ச் பிடித்தார்.

 

அதை பார்த்து மைதானத்திலிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்த நிலையில் தொலைக்காட்சியில் வர்ணித்த சைமன் டௌல் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் அடங்கிய வர்ணனையாளர்கள் குழு “தயவுசெய்து விளையாடாதீர்கள், இப்படியும் பிடிக்க முடியுமா சூப்பர்மேன்” என்ற வகையில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். மேலும் இதை பார்த்த இதர ரசிகர்கள் இந்த டி20 உலகக் கோப்பையின் சிறந்த கேட்ச் இதுவென்று கூறுவதுடன் பறவையைப் போல் பறந்து பிலிப்ஸ் செயல்பட்டதாக சமூக வலைதளங்களில் எக்ஸ்ட்ராவாக பாராட்டி வருகிறார்கள்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News