அபார கேட்ச் பிடித்து அசத்திய ஹர்ஷல் படேல் - வைரலாகும் காணொளி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிரங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். அந்த அணியில் டிராவிஸ் ஹெட்47 ரன்களையும், அனிகெத் வர்மா 36 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய நிக்கோலஸ் பூரன் 70 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 52 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹர்ஷல் படேல் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹர்ஷலின் இந்த கேட்ச் நிகழ்வானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்னிங்ஸின் 13ஆவது ஓவரில் காணப்பட்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அந்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா வீசிய நிலையில், ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஆயூஷ் பதோனி அதனை தூக்கி அடித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த வேகத்தில் இல்லாத காரணமாக அது காற்றில் இருந்தது. அப்போது பவுண்டரில் எல்லையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஹர்ஷல் படேல் கிட்டத்திட்ட 30 மீட்டர்கள் தூரம் ஓடி வந்ததுடன் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். இந்த கேட்சை கண்ட அனவரும் ஒரு கணம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் ஹர்ஷல் படேலின் இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.