இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இலங்கை அணியானது 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா - அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்திருந்த அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்காவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 18 ரன்களிலும், டேன் லாரன்ஸ் 30 ரன்களிலும், கேப்டன் ஒல்லி போப் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 42 ரன்களுக்கும், ஹாரி புரூக் 56 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 61 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களை எடுத்திருந்த நிலையில் மோசமான வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இத்துடன் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி தரப்பில் ஜேமி ஸ்மித் 72 ரன்களுடனும், கஸ் அட்கின்சன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஹாரி புரூக் 52 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்படி பிரபாத் ஜெயசூர்யா பந்துவீச்சில் கணிக்கமுடியாமல் திரும்பிய பந்தை சற்றும் எதிர்பார்க்காத ஹாரி புரூக் க்ளீன் போல்டாகினார். இந்நிலையில் ஹாரி புரூக்கை தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் க்ளீன் போல்டாக்கிய பிரபாத் ஜெயசூர்யாவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.