இளம் வீரருக்கு ஆதரவு குரல் கொடுத்த விராட் கோலி; வைரல் காணொளி!

Updated: Sun, Jun 26 2022 11:13 IST
WATCH: Virat Kohli Comes Out In Teammate Nagarkoti's Defense, Engages In Verbal Argument (Image Source: Google)

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை 1ஆம் தேதியன்று கடந்த வருடம் ரத்து செய்யப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சொந்த மண்ணில் மிரட்டிய விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

எனவே தற்போது நடைபெறும் அந்த தொடரின் கடைசி போட்டியில் வென்று 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் பயிற்சிப் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. 

ஜூன் 23இல் துவங்கிய அப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், பிரஷித் கிருஷ்ணா மற்றும் சட்டேஸ்வர் புஜாரா ஆகிய 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய நிலையில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது பேட்டிங்கை துவக்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 246/8 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

கேப்டன் ரோஹித் சர்மா 25, சுப்மன் கில் 21, ஹனுமா விஹாரி 3, ஷ்ரேயஸ் ஐயர் 0, ரவீந்திர ஜடேஜா 13 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 81/5 என தடுமாறிய இந்திய அணிக்கு அற்புதமாக பேட்டிங் செய்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஸ்ரீகர் பரத் 70* ரன்களும் உமேஷ் யாதவ் 23 ரன்களும் ஷமி 13* ரன்களும் எடுத்தனர். லீசெஸ்டர்ஷைர் சார்பில் அதிகபட்சமாக ரோமன் வால்க்கர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். 

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய லீசெஸ்டர்ஷைர் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய வீரர் புஜாரா டக் அவுட்டான அந்த அணிக்கு அதிக பட்சமாக ரிஷப் பண்ட் 14 பவுண்டரி 1 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதனால் 2 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்களைச் சேர்த்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் கலந்து விளையாடுவதால் ரசிகர்கள் எதிர்பாராத சில கலகலப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது. 

குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயரை எப்படி அவுட் செய்யலாம் என்று விராட் கோலியிடம் ஆலோசனை கேட்டு பிரஷித் கிருஷ்ணா டக் அவுட் செய்தது, புஜாராவை இந்திய பவுலர் முகமது சமி டக் அவுட் செய்து அவரின் தோளில் தட்டி பெவிலியனுக்கு அனுப்பி வைத்த தருணங்கள் ரசிகர்கள் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

ஆனால் இப்போட்டியின் 3ஆவது நாளில் ஒருசில ரசிகர்கள் இளம் இந்திய வீரர் கமலேஷ் நாகர்கோட்டியை தொல்லை செய்த போது அவர்களுக்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தார். இப்போட்டியில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக பந்து வீசி வரும் இளம் இந்திய பவுலர் கமலேஷ் நாகர்கோட்டி பவுண்டரி எல்லை அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அதை மைதானத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சில இந்திய ரசிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். 

அதை கவனித்த விராட் கோலி பெவிலியனில் இருந்து அவரை எச்சரிக்கும் வகையில் பதிலளித்தார். அதை ஒரு ரசிகர் காணொளியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் “வேறு எதுவும் இல்லை தொடர்ச்சியாக அவரிடம் போட்டோ எடுத்துக் கொள்ளுமாறு தான் கேட்டோம். எனது அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு இந்த போட்டியை பார்ப்பதற்காக ஆவலுடன் வந்துள்ளேன். அதனால் குறைந்தது அவரிடம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள மட்டுமே முயற்சித்தேன்” என்று அந்த ரசிகர்கள் விராட் கோலியிடம் கூறுகிறார்கள்.

 

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத விராட் கோலி பெவிலியனில் இருந்துகொண்டே “இங்கு நாங்கள் விளையாடுவதற்கு தான் வந்துள்ளோம், போட்டோ எடுப்பதற்காக அல்ல” என்று கடுமையான முகத்துடன் பஞ்ச் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை