விராட் கோலியை சீண்டிய வங்கதேச வீரர்; களத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
டெஸ்ட் போட்டிகளையும் - விராட் கோலியின் சண்டையையும் பிரிக்கவே முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அவரின் ஆக்ரோஷங்கள், வார்த்தைகள், பேட்டிங்கால் பதிலடி கொடுப்பது போன்றவை வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் நீடித்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் - சிராஜ் ஆகியோருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் விராட் கோலி உள்ளே நுழைந்து பதிலடி கொடுத்தார். அவரின் செயல்பாடு இணையத்தில் தீயாய் பரவியது.
இந்நிலையில் தற்போது விராட் கோலிக்கே நேரடியாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 12 ரன்களுக்குள் வெளியேறியதால், விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடினார். 22 பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்த அவர், மெஹிதி ஹாசன் மிராஸ் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக அவுட்டானார்.
கோலி அவுட்டானவுடன் வங்கதேச பவுலர் தைஜுல் இஸ்லாம், அவர் குறித்து ஏதோ கிண்டலடிக்கும் வகையில் கூறினார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த விராட் கோலி, தைஜுல் இஸ்லாமிடம் நெருங்கி எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல் பார்க்கலாம் என கடுமையான வார்த்தைகளில் கூறினார். இதனையடுத்து உள்ளே வந்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்கள் உள்ளே வந்து சமாதானப்படுத்தினர்.
களத்தை விட்டு செல்லும் வரையில் விராட் கோலியின் கோபம் தணியவே இல்லை. நடுவர்களிடம் கத்திக்கொண்டே வெளியேறினார். 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தம் 4 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி 1, 19*, 24, 1 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். இதனால் இந்திய அணி 45 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்ததை போன்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கோலி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.