மகளிர் ஆசிய கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!

Updated: Tue, Oct 01 2024 22:57 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணி தற்சமயம் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அணிடின் மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும் 21 ரன்களில் நடையைக் கட்டினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரிச்சா கோஷ் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து 36 ரன்களை எடுத்த நிலையில் ரிச்சா கோஷும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் தீப்தி சர்மா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது. 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். அதன்பின் 22 ரன்களில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் தலா 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் 29 ரன்களை எடுத்திருந்த லாரா வோல்வார்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் களமிறங்கிய சோலே டிரையான் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அன்னேரி டெர்க்சன் 21 ரன்களை சேர்த்த நிலையிலும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை