வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கயானாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களில் ஆல் அவுட்டாக, அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 262 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களில் ஆல் அவுட்டாக, தென் ஆப்பிரிக்க அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநயாகன் விருதை வியான் முல்டரும், தொடர் நாயகன் விருதை கேசவ் மஹாராஜும் கைப்பற்றினர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என்று தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பவுமா, “இப்போட்டியின் போது எங்களது உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் கீழுமாக இருந்தது. அதுமட்டுமின்றி இப்போட்டியில் வானிலையும் எங்களுக்கு சாதமாக இருந்தது. இதன் காரணமாக இப்போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது. அதேசமயம் இந்த வெற்றிக்காக நாங்கள் கடினமாக உழைக்க வேண்டியும் இருந்தது. இறுதியுல் எங்களுக்கு கொஞ்சம் அதிரஷ்டமும் இருந்தது.
இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவதற்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம். வேகப்பந்து வீச்சாளர்களை ரபாடா வழிநடத்தினார் மற்றும் சுழற்பந்துவீச்சு துறையை கேசவ் மஹாராஜ் வழிநடத்தினார். பேட்டிங்கைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு அனுபவமற்ற அணியாகவே இருக்கிறோம். அதனால் எங்கள் வீரர்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறோமோ, அவ்வளவு நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாம் ஒரு வலிமையான அணியாகவும் இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.