இதுப்போன்ற ஒரு பேட்டிங்கை டிவி-யில் மட்டுமே பார்த்துள்ளேன் - கேஎல் ராகுல்!

Updated: Wed, May 08 2024 22:50 IST
இதுப்போன்ற ஒரு பேட்டிங்கை டிவி-யில் மட்டுமே பார்த்துள்ளேன் - கேஎல் ராகுல்! (Image Source: Google)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 55 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 75 ரன்களையும் சேர்த்து மிரட்டினர்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து மிரட்டியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி பிளா ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “என்ன பேசுவது என தெரியவில்லை. ஏனெனில் இதுப்போன்ற ஒரு பேட்டிங்கை நான் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துள்ளேன். அவர்கள் விளையாடிய விதம் நம்பமுடியாதது போல் இருந்தது. அவர்கள் விளையாடிய ஒவ்வொரு ஷாட்டும் பேட்டின் சரியான இடத்தில் பட்டு சென்றது. அவர்களின் திறமைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அவர்கள் சிக்ஸர்களை விளாசுவதற்காக கடுமையாக உழைத்துள்ளனர். மேலும் இரண்டாவது இன்னிங்ஸின் ஆடுகள் எவ்வாறு செயல்படும் என்பதை அறிவதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு வழங்கவில்லை. அவர்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்று கூட யோசிக்கா வாய்ப்பளிக்கவில்லை. நீங்கள் தோல்வியின் பக்கம் இருந்தால், உங்களுடைய முடிவுகள் பற்றி அதிகபடியான கேள்விகள் இருக்கும்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த போட்டியில் 40 - 50 ரன்கள் குறைவாக அடித்தோம். பவர்பிளேவில் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்க்க முடியவில்லை. ஆயூஷ் பதோனி மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் எங்களை 165 ரன்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் நாங்கள் 240 ரன்கள் எடுத்திருந்தாலும் அவர்கள் அதனையும் சேஸ் செய்திருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை