அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!

Updated: Mon, Mar 25 2024 11:22 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் நமன் திர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 43 ரன்களில் நடையை கட்டினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால் அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டெவால்ட் பிரீவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என அடுத்தடுத்து சீரான இடைவேளையில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இப்போட்டியின் கடைசி ஐந்து ஓவர்களில் 42 ரன்கள் தான் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனை நிச்சயம் நாங்கள் எட்டுவோம் என்று நினைத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களால் இந்த இலக்கை எட்ட முடியவில்லை. இறுதிக்கட்டத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டதால் கொஞ்சம் தடுமாறினோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி வனந்தஉர்ப்இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதுவும் இது போன்ற ஒரு மிகப்பெரிய மைதானத்தில் விளையாடும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மேலும் ரசிகர்களும் இன்றைய ஆட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இன்றைய ஆட்டம் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். மேலும் திலக் வர்மா அந்த தருணத்தில் இது நல்ல யோசனை என்று நினைத்திருக்கலாம்.நான் அவரை முழுமையாக ஆதரிக்கிறேன். இது எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை