வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.டாக்காவில் நடைபெறவுள்ள இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், பேட்டர்கள் துவக்கம் முதலே ரன்களை குவிக்க திணறினார்கள். இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 7 ரன்களை மட்டுமே சேர்த்தார். அடுத்து விராட் கோலி 9, ரோஹித் சர்மா 27, ஷ்ரேயஸ் ஐயர் 24  ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்கள்.

Advertisement

இதனைத் தொடர்ந்து கேஎல் ராகுல் 70 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்களை சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். அடுத்து, வாஷிங்டன் சுந்தரும் (19) ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 41.2 ஓவர்களில் 186/10 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில், டாப் ஆர்டரில்  லிட்டன் தாஸ் 41 மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் நடையைக் கட்டி வந்தனர். இதனால், வங்கதேச அணி 38.5 ஓவர்களில் 135/9 என படுமோசமாக திணறியது.

அந்த சமயத்தில், 10ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மெஹிதி ஹாசன், முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வங்கதேச அணி வெற்றிபெற 51 ரன்கள் தேவைப்பட்டதால், இந்தியா பக்கம்தான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அந்த சமயத்தில் மெஹதி ஹாசன் தொடர்ந்து அபாரமாக விளையாடியதால், வங்கதேச அணி இறுதியில் 46 ஓவர்களில் 187/9 ரன்களை சேர்த்து வரலாற்று வெற்றியைப் பெற்றது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹதி ஹசன் 38 ரன்களையும், முஷ்தபிசூர் ரஹ்மான் 10 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

இப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா,“போட்டி கடைசிவரை பரபரப்பாக சென்றது. வெற்றிபெற எங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால், வெற்றிபெற முடியவில்லை. இந்திய பௌலர்கள் அனைவரும் சிறப்பாகத்தான் செயல்பட்டனர். பேட்டிங்கில்தான் நாங்கள் சொதப்பினோம். நாங்கள் 25 ஓவர்களில் பேட்டிங் செய்தபோது 240-250 ரன்களை அடிப்போம் என நினைத்தோம். ஆனால், பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொதப்பவிட்டார்கள்.

கூடுதலாக 25-30 ரன்கள் அடித்திருந்தால், நிச்சயம் வெற்றி கிடைத்திருக்கும். இந்த மாதிரி பந்துவீச்சாளர்களுக்கு  சாதகமான பிட்சில், எப்படி விளையாட வேண்டும் என்பதை இனியாவது பேட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வங்கதேச அணி அழுத்தங்களை சமாளித்து சிறப்பாக விளையாடியது. இப்போட்டியில் என்ன தவறு செய்தோம் என்பதை அறிந்துகொண்டு, அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News