நான் அடித்த சதங்களில் இது தான் எனக்கு முதலிடம் - சரித் அசலங்கா!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 4 ரன்களுக்கும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும், ஜனித் லியானகே 11 ரன்னிலும் என பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் வெல்லாலகே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடிய சரித் அசலங்கா சதமடித்து அசத்தியதுடன் 127 ரன்களைச் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கன்னொலி, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கேரி 41 ரன்களையும், ஆரோன் ஹார்டி 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா, “நான் அடித்த சதங்களில் இது தான் எனக்கு முதலிடம். நான் இதை இன்னும் ஆழமாக எடுத்து சொல்ல விரும்பினேன். பந்து பழையதாகிவிட்டால் இந்த மைதானத்தில் விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்று பார்க்க விரும்பினேன். என்னுடன் இணைந்து பேட்டிங் செய்த வெல்லாலகே சில பவுண்டரிகளை அடித்தார், அது எங்களுக்கு உதவியது.
Also Read: Funding To Save Test Cricket
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும், ஆனால் இந்த பிச்ட் இவ்வாறு செயல்படும் என்பதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நான் 35 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் செய்தேன். அதன்பின் நான் பந்துவீச்சாளர்களிடம், புதிய பந்தில் சில விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கேற்றவாரே நாங்கள் புதிய பந்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது எங்களுக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.