இலங்கையில் நடைபெற்று முடிந்த மகளிர் டி20 அசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
அதன்படி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஆகஸ்ட் 11 முதல் 16ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முன்னோட்டமாக இலங்கை அணி இத்தொடரை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய அயர்லாந்து அணி கேப்டன் லாரா டெலானி, நாங்கள் ஒரு அணியாக பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 12 முதல் 18 மாதங்களில் ஒரு அணியாக நாங்கள் மிகவும் மேம்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன், அதனை நாளை நடைபெறும் முதல் போட்டியில் செயல்படுத்துவோம். ஒரு குழுவாக நாங்கள் ஆக்ரோஷமான மற்றும் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். ஆனால் சில சமயங்களில், நீங்கள் விக்கெட் இழப்பை தடுத்து விளையாட முயற்சி செய்ய வேண்டும், ரன்களை சேர்க்காமல் விக்கெட்டை இழப்பது போன்ற பிரச்சனைகளையும் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு அணியாக, ஸ்காட்லாந்திற்கு எதிராக அந்த சவாலை நாங்கள் நிச்சயமாக எதிர்கொண்டோம். எங்களால் விளையாட முடியும் என்று எங்களுக்குத் தெரிந்த பாணியில் விளையாட விரும்புகிறோம். அவ்வாறு அதிரடியாக நாங்கள் விளையாடினால் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை கூட எங்களால் வீழ்த்த முடியும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தியும், பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை வென்றும் காட்டியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.