தரமான கிரிக்கெட்டை விளையாட இன்னும் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது - ஷாஹிதி!
ஐசிசி சமபியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் 103 ரன்களையும், அணியின் கேப்டன் டெம்பா பவுமா 58 ரன்களையும், ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ரம் தலா 52 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ஆஃப்கான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, “பேட்டிங்கில் நாங்கள் போதுமான அளவு சிறப்பாக இல்லை என்று நினைக்கிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் அவர்களுக்கு உதவியாக இருந்தது, ஆனால் முதல் 20 ஓவர்களில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் சரியாக இல்லை. இன்று டாஸ் முக்கிய பங்கு வகித்தது என நினைக்கிறேன். இது வழக்கமான கராச்சி ஆடுகளம் அல்ல.
Also Read: Funding To Save Test Cricket
நன்றாக விளையாட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு, நாங்கள் நிறைய சாதித்துள்ளோம், எல்லா இடங்களிலும் போராடும் திறன் எங்களிடம் உள்ளது. எங்களுக்கு சில முக்கியமான ஆட்டங்கள் மீதமுள்ளன, இன்றைய ஆட்டத்தை மறந்துவிட்டு முன்னேற முயற்சிப்போம். இப்போட்டியில் ரஹ்மத் ஷா மிகவும் சிறப்பாக விளையாடினார். எங்களுடன் நேர்மறையானவற்றை எடுத்துக்கொண்டு முன்னேறுவார், தரமான கிரிக்கெட்டை விளையாட இன்னும் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.