ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று புனே நகரில் நடைபெற்ற போட்டியில் வலுவான நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா டீ காக் 114, வேன் டெர் டுஷன் 133 ரன்கள் அடித்த உதவியுடன் 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33.5 ஓவரில் 167 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

Advertisement

அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முன்னதாக இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடும் தென்னாப்பிரிக்கா இதுவரை 79 சிக்சர்கள் அடித்து ஒரு உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக உலக சாதனை படைத்துள்ளது.

Advertisement

அத்துடன் பெரும்பாலான போட்டிகளில் அசால்டாக 350 – 400 ரன்கள் அடித்துள்ள அந்த அணி நெதர்லாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில் தங்களுடைய முதல் உலகக்கோப்பையை வெல்லும் லட்சியப் பயணத்தில் மிரட்டும் தென் ஆப்பிரிக்கா அடுத்ததாக நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

ஆனால் இந்தியா சொந்த மண்ணில் முதல் 6 போட்டிகளிலும் வென்று அதிரடியாக செயல்பட்டு வருவதால் தென் ஆப்பிரிக்காவை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் நாங்கள் வெல்வோம் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வேன் டெர் டுசன் கூறியுள்ளார்.

இதுபற்றி நியூசிலாந்து வெற்றிக்கு பின் பேசிய அவர், “இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது மிகப்பெரிய போட்டியாகும். நிறைய விளையாடியுள்ள அவர்கள் அணியில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. குறிப்பாக அவர்களிடம் சிறந்த பவுலிங் அட்டாக் மற்றும் பேட்டிங் வரிசை இருப்பதால் அனைத்தும் பூர்த்தியடைந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் அப்போட்டியில் நாங்கள் செய்ய விரும்புவதை வழக்கம் போல செய்தால் எங்களால் வலுவான நிலையை எட்ட முடியும் என்பதை அறிவோம்.

கண்டிப்பாக அந்த போட்டியில் மிகப்பெரிய சவாலும் அழுத்தமும் இருக்கும். நாங்களும் அதை தான் எதிர்பார்க்கிறோம். அதை விட இதற்கு முன் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இங்கே விளையாடி அவர்களை தோற்கடித்துள்ளோம்” என்று கூறினார். அதாவது கடைசியாக 2016 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 ஒருநாள் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. அப்படி சமமான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் தென் ஆப்பிரிக்கா இம்முறையும் இந்தியாவை வீழ்த்தும்” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News