ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்ஷன் மற்றும் ஷாருக் கான் ஆகியோரது அதிரடியான அரைசதங்களின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 84 ரன்களையும், ஷாருக் கான் 58 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி, வில் ஜேக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் விராட் கோலி அரைசதம் அடிக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். 

Advertisement

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில் ஜேக்ஸ் 5 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 100 ரன்களையும், விராட் கோலி 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களையும் சேர்த்தனர். மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் வில் ஜேக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி வீரர் வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியது, ஐபிஎல் தொடரில் அதிவேக சதமடித்த 5ஆவது வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதமடித்து அசத்தியதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் வில் ஜேக்ஸ் சிக்ஸர் அடிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள்

  • கிறிஸ் கெயில் - 30 பந்துகள்
  • யூசூப் பதான் - 37 பந்துகள்
  • டேவிட் மில்லர் - 38 பந்துகள்
  • டிராவிஸ் ஹெட் - 39 பந்துகள்
  • வில் ஜேக்ஸ் - 41 பந்துகள்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News