நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை நடத்தும் இந்தியா நாளை அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதால், கிரிக்கெட் களம் பரபரப்பானதாக மாறியிருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு இதே கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்திருக்கிறது.

Advertisement

இதன் காரணமாக இந்த போட்டிக்கு மேலும் எதிர்பார்ப்பும் சிறிது அச்ச உணர்வும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்திய வீரர்கள் தரப்பில் அவர்கள் மிகுந்த நம்பிக்கை உடன் நேர்மறையான எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார்.

Advertisement

அப்போது பேசிய அவர், “இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சிறந்த அணி என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஆனால், தொடரின் இறுதிக்கட்டத்தை எட்டும்போது எல்லாவற்றையும் முதலில் இருந்துதான் தொடங்கியாக வேண்டும். குறிப்பிட்ட அந்த நாளில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். 

நாங்கள் ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவமும் கவனமும் கொடுக்கப் போகிறோம். நாளைய சவாலுக்கு நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியை விட இந்தப் போட்டி கொஞ்சம் வித்தியாசமானது என நினைக்கிறேன். வானிலையைப் பார்க்கையில் இந்தப் போட்டியை ஒரே நாளில் ஆடி முடித்துவிடுவோம் என நினைக்கிறேன்.

இரு அணிகளும் கடந்த சில வாரங்களாக சவாலான கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறோம். அதனால் இரு அணிகளுமே தங்களின் சிறந்த ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்த முயல்வோம். வான்கடே மைதானத்தில் கூடப்போகும் 33,000க்கும் அதிகமான ரசிகர்களும் இந்திய அணிக்குதான் ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள். 

மைதானம் முழுவதும் நீல நிறத்தில்தான் காட்சியளிக்கப் போகிறது. கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட கூட்டத்தை நாளை பார்க்க முடியும். இந்த மாதிரியான கூட்டத்திற்கு முன்பாக ஆடுவதும் ஒரு வகையில் ஸ்பெஷல்தான். நாங்கள் பல காலமாக எங்களுக்கு ஆதரவளிக்காத பெரிய கூட்டத்தின் முன்பு விளையாடி பழக்கப்பட்டிருக்கிறோம். 

Advertisement

எங்களது நாடு சிறியது. குறைந்த மக்கள்தொகையைக் கொண்டது. ஒரு மைதானத்தை நிரப்பும் அளவுக்குக் கூட்டத்தை எங்களால் காட்ட முடியாது. ஆனாலும், இப்படி ஒரு சூழலில் மகிழ்ந்து அனுபவித்து ஆட விரும்புகிறேன். இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. இந்த வாய்ப்பை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News