INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!

Updated: Sun, Jun 30 2024 20:14 IST
INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி! (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறித்தது.  இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 205 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 149 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மரிஸான் கேப் 69 ரன்களுடனும், நதின் டி கிளார்க் 27 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மரிஸான் கேப் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சினலோ ஜஃப்டா, அன்னெரி டெர்க்சன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த நதின் டி கிளார்க்கும் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ரானா 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆனது. அதன்பின் ஃபாலோ ஆன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லாரா வோல்வார்ட் - அன்னே போஷ்க் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அன்னே போஷ்க் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தது. அதன்பின் லாரா வோல்வார்ட்டுடன் இணைந்த சுனே லூஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனே லூஸ் தனது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனே லூஸ் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்பின் களமிறங்கிய அனுபவ வீராங்கனை மரிஸான் கேப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேப்டன் லாரா வோல்வார்ட் 93 ரன்களுடனும், மரிஸான் கேப் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 105 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை