மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!

Updated: Sun, Oct 06 2024 08:51 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மையா பௌச்சர் - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் மையா பௌச்சர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நாட் ஸ்கைவர், கேப்டன் ஹீதர் நைட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேனியல் வையட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீராங்கனைகளால் வங்கதேச அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் நஹிதா அக்தர், ஃபஹிமா கதுன் மற்றும் ரிது மோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு சதி ராணி மற்றும் திலாரா அக்தர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் சதி ராணி 7 ரன்களுக்கும், திலாரா அக்தர் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த சோபனா மோஸ்தரி - கேப்டன் நிகர் சுல்தானா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் கேப்டன் நிகர் சுல்தானா 15 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இப்போட்டியில் வங்கதேச அணியின் நம்பிக்கையாக இருந்த சோபாஅ மோஸ்தரி 44 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் லின்ஸி ஸ்மித் மற்றும் சார்லோட் டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை