WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய எல்லிஸ் பெர்ரி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி!

Updated: Tue, Mar 12 2024 22:32 IST
WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய எல்லிஸ் பெர்ரி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி! (Image Source: Google)

மகளிர் பீரிமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முன்னேறிய நிலையில், மீதமுள்ள இடத்தை எந்த அணி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி இன்று நடைபெற்றுவரும் முக்கியமான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கத்திற்கு மாறாக ஹீலி மேத்யூஸுடன் சஜீவன் சஜனா தொடக்கம் கொடுத்தார். இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 43 ரன்களைச் சேர்த்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 26 ரன்கள் எடுத்த நிலையில் ஹீலி மேத்யூஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களில் சஜீவன் சஜனாவும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன்கள் ஏதுமின்றியும் என எல்லிஸ் பெர்ரியின் அடுத்தடுத்த பந்துகளில் தனது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர், நாட் ஸ்கைவர் பிரண்ட்,அமஞ்சோத் கவுர், பூஜா வஸ்திரேகர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் எல்லிஸ் பெர்ரி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை எனும் சாதனையை எல்லி பெர்ரி படைத்தார். 

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளாலும் ஆர்சிபி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி மோலினக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சோஃபி மோலினக்ஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா 11 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீராங்கனை சோஃபி டிவைனும் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷம்னைம் இஸ்மாயில் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி - ரிச்சா கோஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. அதேசமயம் ஆர்சிபி அணியின் வெற்றியுடன் சேர்த்து நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பும் உறுதியானது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 40 ரன்களையும், ரிச்சா கோஷ் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 15 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு சீசன் டபிள்யூபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை