WPL 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பழி தீர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Tue, Mar 05 2024 22:45 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில், 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 28 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுபக்கம்  அபார அட்டத்தை வெளிப்படுத்திய மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய அலிஸ் கேப்ஸி 19 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 69 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது. மும்பை அணி தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், பூஜா வஸ்திரேகர், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஸ்திகா பாட்டியா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஸ்திகா பாட்டியா 6 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான ஹீலி மேத்யூஸும் 29 ரன்களுக்கும், அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அமெலியா கெர் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பூஜா வஸ்திரேகர் - அமஞ்சோத் கவுர் இணை அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக போராடினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமஞ்சோத் கவுர் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளாலும் இலக்கை எட்டமுடியாமல் தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முந்தைய தோல்விக்கும் இப்போட்டியில் பழித்தீர்த்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை