WPL 2024: ஆரஞ்சு தொப்பியை வென்ற பெர்ரி; பர்பிள் தொப்பியை கைப்பற்றிய ஷ்ரேயங்கா!

Updated: Mon, Mar 18 2024 14:41 IST
WPL 2024: ஆரஞ்சு தொப்பியை வென்ற பெர்ரி; பர்பிள் தொப்பியை கைப்பற்றிய ஷ்ரேயங்கா! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், டபிள்யூபிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது. 

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதிரடியாக தொடங்கினாலும், அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 44 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின் சோஃபி டிவைன் 32 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 31 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 35 ரன்களையும், ரிச்சா கோஷ் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்து. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி மோலினக்ஸ் ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா தொடர் நாயகி விருதையும் வென்றனர். 

இந்நிலையில் நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கைப்பற்றினார். அதன்படி நடப்பு டபிள்யூபிஎல் தொடரின்  9 போட்டிகளில் விளையாடிய எல்லிஸ் பெர்ரி இரண்டு அரைசதங்கள் உள்பட 69.40 என்ற சராசரியில் 347 ரன்களைச் சேர்த்து ஆர்ஞ்சு தொப்பியை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதேசமயம் டபிள்யூபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைக்கு வழங்கப்படும் பர்பிள் தொப்பியை ஆர்சிபி வீராங்கனை ஷ்ரேயங்கா பட்டில் கைப்பற்றியுள்ளார். அதன்படி நடப்பு சீசனில் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஷ்ரேயாங்கா பாட்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். இதில் அவர் இரண்டு முறை மூன்று விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை