எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஸ்மிருதி மந்தனா!
டபிள்யூபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களைச் சேர்த்தார்.
ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேணுகா சிங், ஜார்ஜியா வர்ஹேம் 3 விக்கெட்டுகளையும், கிம் கார்த், எக்தா பிஸ்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வைட் ஹோட் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேனியல் வைட் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 81 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் ஆர்சிபி அணியானது 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இப்போட்டியில் எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 150 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தியது ஒரு சிறந்த விஷயம். இந்த மைதானத்தில் அதிக வேகத்தில் பந்து வீசுவதே உத்தியாக இருந்தது, ஆனால் ஆட்டத்தின் சூழ்நிலையைப் பொறுத்து நாங்கள் அந்த முடிவை எடுத்தோம். ஏனெனில் இந்த மைதானம் இருவேறு விதமாக செயல்பட்டு வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஒரு அணியாக எங்கள் பந்து வீச்சாளர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அதேபோல் நாங்கள் பேட்டிங்கை தொடங்கிய விதம் அற்புதமாக இருந்தது. நானும் டேனியல் வைட்டும் பல முறை ஒன்றாக பேட்டிங் செய்துள்ளோம். கடந்த போட்டியில் எங்களால் சிறந்த தொடக்கத்தைப் பெற முடியாததால் நாங்கள் மிகவும் சோர்வடைந்தோம். ஆனால் இன்று நாங்கள் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினோம்” என்று தெரிவித்துள்ளார்.