Renuka thakur singh
BANW vs INDW, 1st T20I: ரேணுகா சிங் அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஷஃபாலியுடன் இணைந்த யஷதிகா பாட்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஃபாலி வர்மா 31 ரன்களுக்கும், யஷ்திகா பட்டியா 36 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 30 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் சாஜனா 11 ரன்களுக்கும், பூஜா வஸ்திரேகர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.