WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Tue, Feb 18 2025 22:46 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தியது. வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி - லாரா வோல்வார்ட் இணை தொடக்கம் கொடுத்தன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட்டும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா 9 ரன்களிலும், அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடிய நிலையில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய அதிரடி வீரங்கனை டியாண்டிரா டோட்டின் 7 ரன்னுடன் நடையைக் கட்டினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் - கஷ்வீ கௌதம் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் காஷ்வி கௌதம் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சிம்ரன் ஷேக்கும் 3 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் தியோலுடன் இணைந்த தனுஜா கன்வரும் பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. 

அதன்பின் நிதானமாக விளையாடி வந்த ஹர்லீன் தியோல் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து தனுஜா கன்வரும் 13 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸ்கைவர் பிரண்ட், அமெலிய கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து யஷ்திகா பாட்டியாவும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார்.  பின்னர் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - அமெலியா கெர் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதில் நாட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் கடந்தார். அதேசமயம் அமெலியா கெர் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து 11 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாட் ஸ்கைவரும் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்து நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை