இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் இந்திய அணி 59.52 சதவீத புள்ளிகளுடன் இப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இந்திய அணி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
மேலும் இப்பட்டியளில், தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்ற நியூசிலாந்து அணி 75 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேசமயம் இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 55 சதவீத புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் வங்கதேசம் 50 சதவீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 36.66 சதவீத புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணி 33.33 சதவீத புள்ளிகளுடன் பட்டியலின் 6ஆம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். அதேசமயம் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள இங்கிலாந்து அணி 21,87 சதவீத புள்ளிகளுடன் பட்டியளின் 8ஆவது இடத்தில் தொடர்கிறது.