WTC 2023 Final: 5ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்திய ரஹானே!
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா அணி தற்பொழுது மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்திருக்க, நேற்று இரண்டாம் நாளில் இந்திய அணி 151 ரன்கள் முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்று ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்திலேயே பரத் 3 ரன்னில் போலன்ட் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இன்னொரு பக்கத்தில் ஆடுகளத்தில் பவுன்சர் தாறுமாறாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்றிலிருந்து ஒரு முனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ரகானே அதை இன்றைய நாளிலும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அபாரமான ஒரு சிக்ஸரை அடித்து தனது அரை சதத்தை நிறைவு செய்து விளையாடி வருகிறார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இலங்கை அணி இந்தியாவிற்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. இந்தத் தொடரில் ரகானே மற்றும் புஜாரா இருவரும் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக கழட்டிவிடப்பட்டார்கள். புஜாரா இங்கிலாந்து கவுன்டி போட்டிக்கு விளையாட சென்று அங்கு திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்குள் கடந்த ஆண்டே திரும்ப வந்துவிட்டார்.
ஆனால் ரஹானே அப்படி செல்லாமல் ஐபிஎல் தொடரில் விளையாடி மேலும் மாநில அணியான மும்பை அணிக்கு ரஞ்சித் தொடரில் விளையாடி தனது திறமையை நிரூபித்து தற்பொழுது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்திய அணியில் இடம் பிடித்தார். 512 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த அவர் அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் மிக முக்கியமான ஒரு இன்னிங்ஸ் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இப்போட்டியில் 70 ரன்களை எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5000 ரன்களைக் கடந்தும் அசத்தியுள்ளார். மேலும் இந்திய அணி தரப்பில் 5ஆயிரம் ரன்களைக் கடந்த 13ஆவது இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றூள்ளார்.