யஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சினை நினைவு படுத்துகிறார்- ரவி சாஸ்திரி!

Updated: Sat, Feb 17 2024 22:13 IST
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சினை நினைவு படுத்துகிறார்- ரவி சாஸ்திரி! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அபாரமான தொடக்கத்தை கொடுத்ததுடன் சதமடித்தும் அசத்தினார். இப்போட்டியில் பென் டக்கெட் 153 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் 19 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 104 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 03 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்க்கும் போது இளம் வயது சச்சின் டெண்டுல்கரை பார்பது போல் உள்ளது என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விளையாட்டு வியப்பை ஏற்படுத்தியது. பேட்டிங்கில் மட்டும் இல்லை, பீல்டிங்கிலும் அவர் அதிக துடிப்புடன் செயல்பட்டார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலை களத்தில் பார்க்கும் போது சச்சின் டெண்டுல்கர் என் நினைவுக்கு வருகிறார். யசஸ்வி ஜெய்ஸ்வாலை பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் பகுதி நேர பந்துவீச்சாளராகும் ரோஹித் சர்மாவால் பயன்படுத்தி கொள்ள முடியும். களத்தில் எப்போதுமே துடிப்புடன் பிஸியாகவே இருப்பதால் தான் எனக்கு ஜெய்ஸ்வாலை பார்க்கும் போது இளம் வயது சச்சின் டெண்டுல்கர்  நினைவுக்கு வருகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட்டில் பெரிய எதிர்காலம் உள்ளது” என்று பாராட்டியுள்ளார்..

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை