‘எனக்கு இது பழகிவிட்டது’ - அணியில் இடம் கிடைக்காதது குறித்து மனம் திறந்த சஹால்!
இந்தியாவில் வரும் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் நட்சத்திர் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இடம்பிடிக்காதது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சஹால் “உலகக் கோப்பை தொடர் என்பதால் அணியில் 15 பேர் மட்டுமே இடம் பெற முடியும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அணியில் இடம்பெறாதது கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால், நான் கடந்து வந்து விட்டேன். எனக்கு இது பழகிவிட்டது. ஏனெனில் 3-வது முறையாக உலகக் கோப்பை அணியில் நான் இடம்பெறவில்லை.
அதனால் தான் இப்போது இங்கு வந்துள்ளேன். எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும். அது எங்கு வேண்டுமானாலும் நடக்கட்டும் என வந்துள்ளேன். எனக்கு இங்கு சிவப்பு பந்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் நான் கவனம் செலுத்தி, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் எனது கவனத்தை வைக்கிறேன். இது நல்ல அனுபவமாக எனக்கு இருக்கும் என கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.