ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் சகாப்வா 8 ரன்னிலும், கிரேக் எர்வின் 21 ரன்னிலும், சீயான் வில்லியம்ஸ் 33 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த விஸ்லி மதவேரா - சிக்கந்தர் ரஸா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மதவேரா 67 ரன்களையும், சிக்கந்தர் ரஸா 65 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய வங்கதேச அணியில் முனிம் ஷரிஹர் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 32 ரன்னிலும், அமுனுல் ஹக் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய நஜிமுல் ஹைசைன் சாண்டோ அதிரடியாக விளையாடி 37 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் இறுதிவரை போராடிய கேப்டன் நுருல் ஹசன் 26 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்தார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.