இந்திய அணியில் சேவாக், சச்சின் ஓய்வுக்கு பிறகு தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான், தனது இடத்தை அணியில் உறுதி செய்தார். ஐசிசி தொடர்களில் பட்டையை கிளப்பும் தவான், இந்திய அணியின் பல்வேறு வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு திரும்பினார். டெஸ்ட் போட்டியில் தவான் இடம்பெறுவது இல்லை என்பதால், சீனியர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கும் போது எல்லாம் ஷிகர் தவானை தான் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்து பிசிசிஐ ஜூனியர்களை வழிநடத்தும் பொறுப்பை வழங்கியது.
ஐபிஎல் தொடர்கள் மூலம் இழந்த ஃபார்மை மீட்ட ஷிகர் தவான், ரோஹித் சர்மாவின் ஆதரவோடு மீண்டும் இந்தியாவின் நம்பர் அணியிலும் இடம் பிடித்தார். இடம் பிடித்தது மட்டுமல்லாது, பழைய அதிரடி ஆட்டத்தையும் தவான் வெளிப்படுத்தி, இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரையும் தவான் தலைமையிலான அணி, வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் சாதனை நாயகன்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்த விசேஷ பட்டியலில் 6500 ரன்களுக்கு மேல் தொடக்க வீரர்களாக அடித்தவர்களே உள்ளனர்.
முதலிடத்தில் சச்சின் 15,310 ரன்களுடனும், கங்குலி 9,146 ரன்களுடனும், ரோஹித் சர்மா 7,409 ரன்களுடனும், வீரேந்தர் சேவாக் 7,240 ரன்களுடனும், ஷிகர் தவான் 6,501 ரன்களுடனும் உள்ளனர். இந்த நிலைவயில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ஷிகர் தவானே தொடக்க வீரராக களமிறங்கவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.