ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி அசத்தல் வெற்றியைப் பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் மருமணி 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கிரெய்க் எர்வின் - இன்னசெண்ட் கையா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கையா 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிரெய்க் எர்வினும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வெஸ்லி மதவெரே, சீன் வில்லியம்ஸ், ரியான் பர்ல் ஆகியோரும் அடுத்தடுத்து சோபிக்க தவறி விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கிரஹாம் ஹும் 3 விக்கெட்டுகளையும், ஹேரி டெக்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடவுள்ளது.