இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கும் கனவை மறக்க வேண்டிய ஐந்து வீரர்கள்!

Updated: Wed, Jun 09 2021 14:30 IST
5-indian-players-whose-odi-career-is-almost-over (Image Source: Google)

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் இந்திய ஒருநாள் அணிக்காக அறிமுகமாகும் வீரர்களும் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் பெஞ்ச் பலமும் மிகவும் வலுவாக மாறியுள்ளது. 

இதனால் அவர்களுக்குள்ளாவே அணியில் யார் இடம்பெறுவோம் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடி தற்போது அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட சில வீரர்கள் மீண்டும் அணிக்குள் நுழைய வாய்ப்பில்லாமல் ஓய்வு பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அப்படி இந்திய ஒருநாள் அணியில் ஜொலித்து, தற்போது வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கவுள்ள ஐந்து வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்..!

அஜிங்கியா ரஹானே

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே. இவர் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இருந்து நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். மேலும் ரோஹித், தவான், சுப்மன் கில், பிரித்வி ஷா, கே.எல். ராகுல் ஆகியோர் தற்போது சிறப்ப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரஹானேவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைப்பது இயலாத ஒன்று. 

இந்திய அணிக்காக இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 2,962 ரன்களைச் சேர்த்துள்ளார். இவர் தனது கடைசி ஒருநாள் போட்டியை 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிவரும் இவர், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்த தவறிவிட்டார். 

இருப்பினும் அவருக்கும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் அவருக்கு அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. 

தற்போது 36 வயதாகும் தினேஷ் கார்த்திக்கிற்கு இனியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது காணல் நீரைப் போன்றது தான் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

கேதார் ஜாதவ்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ். இவருக்கு நீண்ட காலமாக இந்தியாவில் வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதனை அவர் சாரியாக பயன்படுத்த தவறிவிட்டார். 

இதனால் கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான தொடருக்கு பிறகு அவரை தேர்வாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இதற்கு மேலும் அவர் அணியில் இடம்பெறுவார் என்ற எண்ணமும் ரசிகர்களுக்கு கிடையாது. 

இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேதர் ஜாதவ் 1,389 ரன்கள் சேர்த்துள்ளார். 

இஷாந்த் சர்மா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் இந்திய அணிக்காக இதுவரை 100- க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

ஆனாலும் இவர் இந்திய அணிக்காக தனது கடைசி ஒருநாள் போட்டியை 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியனார். தொடர் காயம் மற்றும் சரிவர பந்து வீசாதது போன்ற காரணங்களால் இவருக்கு அதன் பின் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இஷாந்த் சர்மா இதுவரை இந்திய அணிக்காக் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இவர் சிறப்பாக செயல்பட்டு வந்த போதிலும், அஸ்வினை தேர்வாளர்கள் மீண்டும் ஒருநாள் தொடரில் சேர்க்காமல் இருப்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது. 

தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மட்டும் விளையாடி வரும் அஸ்வின், இதன் பிறகும் இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ரசிகர்காளுக்கு இல்லை.

இதுவரை இந்திய அணிக்காக 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை