இதுநாள் வரை 140 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க, கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை விட 60 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை. சிக்ஸர்கள் சாதனையும் கெயிலிடம்தான் இருக்கிறது.

Advertisement

சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் தான் அவர்கள் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்பதைக் கடந்தும் ஒரு ரசிகர்கூட்டம் இருக்கும். அதனால்தான் கெயிலை  ‘யூனிவர்சல் பாஸ்’ என்கிறார்கள். சில வீரர்களுக்கு மட்டும் கிரிக்கெட் என்பது இயற்கையாகவே வாய்க்கும். அவர்கள் எந்தவொரு பயிற்சியும் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அந்த நாள் அவர்களுடைய நாள் ஆவதற்கு சில நிமிடங்கள் போதுமானதாக இருக்கும்.

Advertisement

பவர்ஃபுல் ஹிட்டர் என்றதும் சில வீரர்களின் அதிரடி ஆட்டம் நமக்கு நினைவுக்கு வரலாம். அப்படிப்பட்ட வீரர்கள் ஒரு நாள் போட்டிகளின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். குறைந்த பட்சம் டி20 போட்டியின் முதல் பந்தையேனும் பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், டெஸ்ட் போட்டியின் முதல் பந்தை சிக்ஸுக்கு அனுப்பும் லாவகம் எல்லாம் ஒருவருக்கு மட்டுமே அப்போது வாய்த்திருந்தது. அவர் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில்.

டெஸ்ட் போட்டிகளில் முச்சதப் பட்டியலில் வீரர்களின் பெயர் நீளும். ஆனால், இரண்டு முச்சதம் என்றால் அந்தப் பட்டியல் சற்று சுருங்கிவிடும். ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதமும் அதே நிலைதான். டி20 போட்டிகளில் அதிக சதம், அதுவும் 10,000 ரன்கள் என்பதெல்லாம் கெயில் ஒருவரைத்தவிர யாருக்கு வாய்க்கும் என்பதே இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. உலகில் அதிகம் பேர் பார்க்கும் டி20 போட்டியான ஐபிஎல்லில் 357 சிக்ஸர்கள். அதுவும் 140 இன்னிங்ஸ்களில்.

ஃப்ரீலான்சர் என்னும் சொல்லாடலை அதிகம் கேட்கும் காலமிது. கெயில் ஒரு டி20 ஃப்ரீலான்சர். சிட்னி தண்டர், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், தாக்கா கிளாடியேட்டர்ஸ், பரிசால் பர்னர்ஸ், லாகூர் கலாந்தார்ஸ், பேட்ரியாட்ஸ், ஸ்டான்ஃபோர்டு சூப்பர்ஸ்டார்ஸ் என கெயில் விளையாடும் பல அணிகளின் பெயரை எல்லாம் அவர் எப்படி நினைவு வைத்துக் கொள்கிறார் என்பது கூட ஆச்சர்யமாக இருக்கும். அத்தனை நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விளையாடி இருக்கிறார். ஆனால், அது கெயிலுக்கு ஒரு பொருட்டாக இருப்பதே இல்லை. அந்த நாள் எப்போது தன்னுடையதாக மாறுகிறது என்பதை அவர் உணர்வதே இல்லை.

எந்தவொரு சதமோ, சாதனையோ திட்டமிட்டு செய்ததில்லை என்கிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் ஜமைக்காவின் மற்றொரு உலக சூப்பர் ஸ்டாரான உசைன் போல்ட். ஒலிம்பிக் 100 மீட்டர் மின்னல் வேக கோல்ட் வின்னர் போல்ட் கெயிலுக்கு தெரிந்த அளவில் ஒரு வேகப்பந்து வீச்சாளர். ஒரு சாரிட்டி போட்டியில் இருவரும் எதிர் எதிர் அணிகளுக்கு ஆடி இருக்கிறார்கள். கெயில் இதுவரை சந்தித்ததில் சிறப்பான பவுன்சரை வீசியது போல்ட் தான் என்கிறார். விஷயம் அதுவல்ல, போல்ட் 9.58 நொடிகளில் ஓட வேண்டும் என முன் தீர்மானம் செய்து ஓடுவதில்லை. அது இயல்பாகவே நடக்கிறது என்கிறார் கெயில். ஜமைக்கா மண்ணின் மைந்தர்களுக்கு எல்லாம் இயல்பாகவே நடக்கிறது. பிற வீரர்களுக்கு கிடைக்கும் பயிற்சியோ, வாய்ப்புகளோ அவர்களுக்கு என்றும் கிடைக்கப்போவதில்லை. அதை அவர்கள் கண்டு கொள்வதுமில்லை.

Advertisement

ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகவும் முக்கியமான விஷயம் அவர்களது நேர்த்தியான ஷாட் தான். எந்தவொரு பயிற்சியும் இல்லாமல், அது நேச்சுரல் கிஃப்ட்டாக இருக்கும் வீரர்களுக்கு இது மிகவும் சுலபமாக வரும். ஷேவாக்கும், கெயிலும் பெளலர்களை அப்படித்தான் டீல் செய்வார்கள். இருவருக்கும் ஃபுட்வொர்க் என்று ஒன்று கிடையாது. பந்து வருகிறது, அதை நாம் அடிக்கிறோம் என்கிற ஒரு ரோபோட்டிக் மனநிலை மட்டுமே எஞ்சி நிற்கும். ஒரு பெளலர் தன்னை சோதிக்கிறார் என முடிவு செய்துவிட்டால், கெயில் க்ரீஸ் லைனில் இருந்து சில் இன்ச் நகர்ந்து வந்து நிற்பார். கெயிலின் உடலுக்கும், அவரின் இந்த மேனரிஸத்துக்கும் எந்த பெளலருக்குமே சற்று நிலை குலையத்தான் செய்யும்.

புனே வாரியர்ஸ்க்கு எதிராக கெயில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக அடித்த 175 ரன்கள். அந்தப் போட்டியைப் பார்த்த யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. பால் கணக்கில் கெயில் சரியாக 11 ஓவர்கள் பிடித்து இருந்தார். பெளலர்கள் நொந்தது தனிக்கதை என்றால், கெயிலின் வேகத்தை கட்டுப்படுத்த தானே களத்தில் இறங்கிய ஆரோன் ஃபிஞ்சின் நிலைமை தான் இன்னும் மோசம். ஒரு ஓவரில் 29 ரன்கள். டீப் விக்கெட்டில் இரண்டு சிக்ஸ், லாங் ஆனில் இரண்டு சிக்ஸ். அலி முர்தாஸாவின் முதல் ஓவர் 17 ரன்கள் என்றால், இரண்டாம் ஓவரின் இறுதியில் அவரது பெளலிங் கார்டு 45 என்றானது. 

புனேவின் பயிற்சியாளரான ஆலன் டொனால்டு அந்தப் போட்டியை இவ்வாறு குறிப்பிட்டார், ‘‘அனைத்து வீரர்களின் முகத்திலும் பயத்தை மட்டுமே பார்த்தேன். அப்படியொரு ஆக்ரோஷமான ஆட்டத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அடுத்த போட்டிக்கு இவர்களை எப்படி தயார்படுத்துவேன் என்றே தெரியவில்லை.’’ அது தான் கெயில். அந்தப் போட்டியில் மட்டும் கெயில் அடித்தது 17 சிக்ஸர்கள்.

Advertisement

ஐபிஎல் என்பது கெயிலைப் பொருத்தவரையில், தான் கனவிலும் எதிர்பார்க்காத ஒரு பணத்தை அணியின் உரிமையாளர்கள் தருகிறார்கள். அதற்கு நியாயம் சேர்க்காமல் பென்ச்சை தேய்ப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. கெயிலுக்கு இந்தியா பிடிக்க மற்றுமொரு காரணம், இங்கிருக்கும் ரசிகர்கள் தான். கெயில் விளையாட களத்தில் இறங்கினாலே அவர்களுக்கு தி குஷி தான். 

ஏனெனில் அவரது அதிரடியான ஆட்டமும், இமாலய சிக்சர்களும் ரசிகர்களின் மிகப்பேரும் எதிர்பார்ப்பாகும். அதனால் தான் அவரது 42ஆவது பிறந்தநாளான இன்று கியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். #HappyBirthdayChrisGayle

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News